1 யோவான் 5:7 மனித இடைச்செருகல்
✍️ கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் திரித்துவம் என்பது அடிப்படையான ஒன்று. திரித்துவம் இல்லையென்றால் கிறிஸ்தவம் இல்லை. கிறிஸ்தவத்திற்கு அடித்தளமாக இருக்கும் திரித்துவத்திற்கான ஆதாரம் பைபிளில் எந்த ஒரு இடத்திலும் இல்லை. இருந்தபோதிலும் திரித்துவத்தை வெறித்தனமாக பின்பற்றக்கூடிய கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு ஆதாரமாக 1யோவான் 5: 7 வசனத்தை குறிப்பிடுகின்றனர். விவரம் தெரிந்த பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த வசனத்தை ஒருபோதும் ஆதாரமாக மாற்று சமூக மக்களிடம் காட்டுவதில்லை. ஏனென்றால் இந்த வசனம் பைபிளில் புகுத்தப்பட்ட வசனம் என்பதை அவர்கள் அறிந்து கொண்டதுதான் இதற்கான காரணம். இனி அந்த வசனம் குறித்தும் அதன் நம்பகத்தன்மை குறித்தும் ஆராய்வோம்.
👉1 யோவான் 5
7: (பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;
For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one. (KJV)
✍️ கமா ஜோஹன்னியம் என்று அழைக்கப்படுகின்ற 1யோவான் 5:7 வசனமாவது பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்தைய எந்த கிரேக்க கையெழுத்து பிரதிகளிலும் இல்லை என்பதால் பல்வேறு பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வசனத்தை தங்களது பதிப்புகளில் சேர்க்கவில்லை. இந்த வசனம் எட்டு பிற்காலத்து கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் மட்டுமே உள்ளது. அதிலும் அவற்றில் நான்கில் ஓர குறிப்பாக மட்டுமே(marginal note) உள்ளது. அசல் நகல் செய்யப்பட்ட பிறகு இந்த ஓரக் குறிப்பு வசனமாக சேர்க்கப்பட்டுள்ளது.
✍️ ஐரோப்பிய தேவாலயம் அடிப்படையில் இரண்டு பகுதிகளாகப் பிரிந்திருந்தது. மேற்கு தேவாலயம் லத்தீன் மொழி பேசியது மற்றும் லத்தீன் பைபிள்களை பயன்படுத்தியது. கிழக்கு தேவாலயம் கிரேக்க மொழியையும் கிரேக்க பைபிள்களையும் பயன்படுத்தியது.
கிரேக்க கையெழுத்துப் பிரதிகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது மிக முக்கியம். ஏனெனில் புதிய ஏற்பாடு முதலில் கிரேக்க மொழியில் தான் எழுதப்பட்டது. ஆரம்பகால கிறிஸ்தவர்களும் எபிரேய பழைய ஏற்பாடுக்கு பதிலாக முதன்மையாக கிரேக்க பழைய ஏற்பாட்டை தான் (செப்டுவஜின்ட்) பயன்படுத்தினர். இந்த பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக நீடித்தது. கிறிஸ்தவர்கள் பின்னர் வட ஆபிரிக்கா உட்பட ரோமானியப் பேரரசின் மேற்குப் பகுதியில் உள்ள லத்தீன் பேசும் தேவாலயத்திற்கு கிரேக்க பைபிளை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தனர்.
✍️ லத்தீன் பிரதிகள் கிரேக்க பிரதிகள் மற்றும் ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்ட லத்தீன் பிரதிகளில் இருந்தும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. ஆனால் கிரேக்க பைபிள் பிரதிகள் கிரேக்க நகல்களிலிருந்து மட்டுமே நகல் எடுக்கப்பட்டது. கிரேக்க பைபிளுக்கு எந்த மொழிபெயர்ப்பும் தேவையில்லை. 1 யோவான் 5:7 வசனம் ஆரம்பகால கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இல்லாமல், சுயசார்பாக 1 யோவான் 5:7 வசனம் மேற்கு லத்தீன் கையெழுத்துப் பிரதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பிழை முதலில் ஸ்பெயினுக்கும் வட ஆபிரிக்காவிற்கும் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் இத்தாலி மற்றும் கவுல் (பிரான்ஸ்) ஆகிய நாடுகளுக்குள்ளும் நுழைந்தது. இந்த இடங்கள் அனைத்தும் மேற்கு லத்தீன் பேசும் தேவாலயத்தின் வட்டாரத்தில் இருந்தன.
✍️ ஆரியன் சர்ச்சை இருந்த காலகட்டத்தில் ஆரம்பகால சர்ச் பிதாக்களுக்கு திரித்துவத்தை நிலைநாட்ட பைபிளிலிருந்து அதை உறுதிப்படுத்தும் வசனங்களை மேற்கோள் காட்ட வேண்டிய அவசியமும் நிர்பந்தமும் இருந்தது. பைபிளிலிருந்து பல வசனங்களை சுட்டிக்காட்டி திரித்துவத்தை நிலைநாட்ட முயன்ற ஆரம்பகாலச் சர்ச் பிதாக்கள் எவரும் 1யோவான் 5:7 வசனத்தை மேற்கோள் காட்டவில்லை. அத்தைய காலகட்டத்தில் கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் எதிலும் இந்த வசனம் இல்லவே இல்லை.
✍️ அந்த வார்த்தைகள் கோடக்ஸ் சைனைட்டிகஸ், கோடெக்ஸ் அலெக்ஸாண்ட்ரினஸ், த வாடிகன் மேனுஸ்கிரிப்ட் 1209, த ஒரிஜினல் லாட்டீன் வல்கேட், த ஃபிலோக்செனியன்-ஹார்க்ளீன் சிரியாக் வர்ஷன், அல்லது சிரியாக் பெஷிட்டா போன்ற மிக முக்கியமான கையெழுத்துப் பிரதிகளில் இல்லை.
👉 1808 புதிய ஏற்பாட்டின் ஆசிரியர்கள் மேம்படுத்தப்பட்ட பதிப்பில் கமாவை நிராகரிக்க பின்வரும் காரணங்களைக் கூறுகின்றனர்:
1️⃣. பரலோக சாட்சிகளைப் பற்றிய இந்த உரை பதினைந்தாம் நூற்றாண்டை விட முன்னர் எழுதப்பட்ட எந்த கிரேக்க கையெழுத்துப் பிரதியிலும் இல்லை.
2️⃣. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தைய எந்த லத்தீன் கையெழுத்துப் பிரதியிலும் இல்லை.
3️⃣. இந்த வசனம் பண்டைய பதிப்புகள் எதிலும் காணப்படவில்லை.
4️⃣. திரித்துவத்தின் கோட்பாட்டை நிரூபிக்க கிரேக்க திருச்சபை எழுத்தாளர்கள் எவராலும் இந்த வசனம் மேற்கோள் காட்டப்படவில்லை. ஆனால் இந்த வசனத்திற்கு முன்னும் பின்னும் உள்ள வசனங்களை அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
5️⃣. ஆரம்பகால லத்தீன் தந்தையர் எவராலும் இது மேற்கோள் காட்டப்படவில்லை.
6️⃣. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நன்மதிப்பும் புகழும் அடையாத லத்தீன் எழுத்தாளரான விர்ஜிலியஸ் டாப்சென்சிஸால் என்பவரால் இது முதன்முதலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும் அவரால் இது போலியாக புனையப்பட்டள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
7️⃣. சீர்திருத்தம் செய்யப்பட்ட புதிய ஏற்பாட்டின் பல பதிப்புகளில் இது போலியாக புனையப்பட்டுள்ளது என்பதால் இந்த வசனம் தவிர்க்கப்பட்டுள்ளது.
8️⃣. இது லூதரின் ஜெர்மன் பதிப்பில் தவிர்க்கப்பட்டுள்ளது.
👉 கிறிஸ்தவர்களே சற்று சிந்தியுங்கள். ஆரம்பகால பைபிள் கையெழுத்துப் பிரதிகளில் இல்லாத ஒரு வசனத்தை ஆதாரமாக வைத்து தான் உங்களது வாழ்க்கையை தொலைக்க போகிறீர்களா? திரித்துவத்திற்கு ஆதாரமாக பைபிளில் எந்த ஒரு வசனமும் இல்லை. அதாவது பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஆகிய மூன்று நபர்களும் ஒரே தேவனாக செயல்படுவார்கள் என்று சொல்லக்கூடிய ஒரே ஒரு வசனம் கூட பைபிள் இல்லை. பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் ஆங்காங்கே திரித்துவம் பேசப்பட்டுள்ளது என்று பைபிள் வசனத்தை திரித்து நீங்கள் எத்தனைதான் விளக்கம் கொடுத்து உங்களை நீங்களே திருப்திக் பட்டுக்கொண்டாலும், ஆரம்பகாலம் முதல் இயேசு மற்றும் இயேசுவின் சீடர்கள் காலம் வரையிலும் கூட எந்த ஒரு நபரும் திரித்துவ தேவனை வணங்கினார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இயேசுவின் காலம் வரையிலும் இஸ்ரவேலர்கள் திரித்துவம் என்ற ஒன்றை அறியாத மக்களாகவே இருந்துள்ளார்கள். கிறிஸ்தவ சமூகத்தைப் பொறுத்தவரையில் திரித்துவம் என்பது இயேசுவின் காலத்தை கடந்து 150 ஆண்டுகளுக்கு பிறகு மெல்ல மெல்ல தலை எடுக்க தொடங்கி மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு அது அதிகார மையத்தை அடைந்தது. அப்படி இருக்கும் பொழுது இயேசு உட்பட எந்த ஒரு தீர்க்கதரிசியும் அல்லது இயேசுவின் சீடர்களோ அல்லது பவுலோ போதிக்காத திரித்துவத்தை நம்பி உங்கள் வாழ்க்கையை இந்த உலகிலும் மறுமையிலும் அழித்துக் கொள்ளப் போகிறீர்களா?
👉 நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்;. ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.
(அல்குர்ஆன் 5:73)
✍️ சிந்திக்கும் மக்களுக்கு மேலே உள்ள குர்ஆன் வசனத்தில் தெளிவான படிப்பினை உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக