உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.
உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.
✍️ பைபிள் மனிதக் கரங்களால் கரை படிந்து விட்டது என்பதை குர்ஆன் தெள்ளத் தெளிவாக கூறுகிறது. இதற்கு பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு மற்றும் அது கடந்து வந்த வரலாற்றையும் படிக்கும்பொழுது, பைபிள் மனித கரங்களால் மிக மோசமான அளவு சிதைந்து போயிருக்கிறது என்பதை மிகத்தெளிவாக உணர்த்திவிடும். இதனால் விரக்தி அடைந்த கிறிஸ்தவர்கள் தாங்கள் வேதம் என்று நம்பும் பைபிளை காப்பாற்றிக் கொள்வதற்காக குர்ஆனின் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டும் என்பதற்காக உதுமான் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனை முன்வைத்து கிறிஸ்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அந்த குற்றச்சாட்டுகளில் ஒன்று தான் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் குர்ஆனின் மாற்றம் செய்து விட்டார் அல்லது திருத்தி விட்டார் என்னும் குற்றச்சாட்டாகும். அவற்றை குறித்து இனி ஆய்வு செய்வோம்.
✍️ உத்மான் ரலி அவர்களின் ஆட்சியின் போது ஆர்மீனியா, அஜர்பைஜன் போன்ற பகுதிகளையும் இஸ்லாம் சென்றடைந்தது. ஆகவே இஸ்லாம் பல அரபு அல்லாத நாடுகளை எட்டியதால், அங்குள்ளவர்களிடம் இருந்து குர்ஆனை ஓதுவதில் வேறுபாடுகள் வெளிப்பட்டன. பின்வரும் ஹதிஸ் அதைப் பற்றி கூறுகிறது;
👉 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.
எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4987.
அத்தியாயம் : 66. குர்ஆனின் சிறப்புகள்
✍️ உதுமான் ரலி அவர்கள் சக தோழர்களுடன் பிரச்சினையை குறித்து கலந்து ஆலோசித்து, பிரச்சனைக்கு தீர்வு காண அவர்களிடம் உள்ள பிரதிகளை கேட்டார். இது குறித்து ஒருமுறை அலி ரலி அவர்களிடம் கேட்ட போது, அவர் கூறினார்:
👉 பிளவு மற்றும் கருத்து வேறுபாடு இல்லாத ஒரு முஸஃப்பை மக்களிடம் கொண்டு செல்வதை நான் கண்டேன். இது ஒரு சிறந்த வழிமுறை என்று நாங்கள் கூறினோம்.
(இப்னு அபி தாவூத் கிதாப் அல்-மசாஹிஃப், ஹதீஸ் 62. ஃபத் அல்-பாரியில் இப்னு ஹஜ்ர் ஸஹீஹ் என வகைப்படுத்தியுள்ளார்)
👉 கதிர் பின் அஃப்லா(Kathir bin Aflah) அறிவிப்பின்படி, பணியை மேற்பார்வையிட பன்னிரண்டு உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டது. (கிதாப் அல் மசாஹிஃப், ஹதீஸ் 72. இப்னு கதிரால் ஸஹீஹ் என வகைப்படுத்தப்பட்டுள்ளது)
✍️ இந்தக் குழு வெறுமென அபூபக்கர் ரலி ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆனை மட்டும் நம்பி கொண்டிருக்காமல் அபூபக்கர் ரலி ஆட்சி காலத்தில் எவ்வாறு குர்ஆன் அனைத்து ஸஹாபாக்களிடம் இருந்தும் தொகுக்கப்பட்டதோ அதே நடைமுறையை மறுபடியும் பின்பற்றி குர்ஆனை பிரதி எடுத்தனர். இவ்வாறு பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனை மறுபடியும் அபூபக்கர் ரலி ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆனுடன் சரி பார்த்துக் கொண்டனர்.
👉 Mus’ab bin Sa’d அறிவிக்கிறார்: ‘உத்மான் ரலி அவர்கள் மக்களுக்கு ஒரு பிரசங்கத்தை வழங்கினார். மேலும் கூறினார்: உங்கள் தீர்க்கதரிசி (வெறும்) பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தும் நீங்கள் குர்ஆனைப் பற்றி வேறுபடுகிறீர்கள். அல்லாஹ்வின் தூதரிடமிருந்து(ஸல்) நீங்கள் கேட்ட குர்ஆனிலிருந்து உங்களிடம் உள்ள எதையும் என்னிடம் கொண்டு வாருங்கள் என்றார். பிறகு எழுதப்பட்ட பலகைத்துண்டுகள், தோள்பட்டை-கத்திகள் மற்றும் காகிதத்தோல் துண்டுகளுடன் ஒருவர் அவரிடம் வந்ததுடன் இது தொடங்கியது. பிறகு அவரிடம்(எழுதப்பட்ட துண்டுகள்) எதையாவது கொண்டு வந்தவர்களிடம்: “இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து(ஸல்) கேட்டீர்களா என்று கேட்கப்பட்டது. பின்னர் அவர் கேட்டார், "மக்களிடையே மொழியில் சிறந்தவர் யார்?" அவர்கள், “ஸாயீத் பின் அல்-அஸ்” என்று சொன்னார்கள். பின்னர் அவர் கேட்டார், "மக்கள் மத்தியில் எழுதுவதில் சிறந்தவர் யார்?" அவர்கள், “ஸைத் பின் தாபித்” என்றார்கள். பிறகு அவர், ஜைத் எழுதட்டும், ஸாயீத் சொல்லட்டும்" என்று கூறினார். பின்னர் அவர் எழுதப்பட்ட முஸஃப்பை பல்வேறு நகரங்களுக்கு அனுப்பினார். யாரும் அதை எதிர்ப்பதை நான் காணவில்லை. (கிதாபுல் மசாஹிஃப், ஹதீஸ் 67. ஸஹீஹ்)
✍️ இவ்வாறு உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆன் என்பது சஹாபாக்கள் அனைவரிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டு அதன் பிறகு தகுந்த ஆய்வுகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் பிரதி எடுக்கப்பட்டதாகும். அவ்வாறு பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனை ஸஹாபாக்கள் எவரும் எதிர்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
✍️ குர்ஆன் தொகுக்கும் இரண்டு முறையிலும் பொறுப்பேற்ற ஜைத் பின் தாபீத் (ரலி) அவர்கள், ‘உத்மானின் காலத்தில் சுயாதீனமான முஷப்பை உருவாக்கிய பின்னர் அவர் அதை அபூபக்கரின் காலத்தில் தயாரிக்கப்பட்டவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவை இரண்டும் ஒத்ததாக இருந்தன என்று சாட்சியம் அளித்துள்ளார்.
👉 “நான் முஷப்பை அந்த கையெழுத்துப் பிரதிகளுடன் ஒப்பிட்டேன்; அவற்றில் எந்த ஒரு வேறுபாடுமில்லை.”
(முஷ்கில் அல்-அதர், ஹதீஸ் 2645)
✍️ உஸ்மான் ரலி ஆட்சிக்காலத்தில் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆன் அபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆனுடன் எந்த வகையிலும் முரண்படவில்லை என்பதற்கு இது ஒரு சான்றாகும். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!
👉 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
(மூன்றாவது கலீஃபா) உஸ்மான்(ரலி) (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா(ரலி) வசமிருந்த குர்ஆன் பதிவுகளை வாங்கி வரச்செய்து), ஸைத் இப்னு ஸாபித், ஸயீத் இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரை (அழைத்து வரச்செய்து அவர்களிடம்) அவற்றை ஏடுகளில் பிரதியெடுக்கப் பணித்தார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அன்சாரியான ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களைத் தவிர இருந்த குறைஷியரான மற்ற மூவரிடமும்), 'நீங்கள் மூவரும் ஸைத் இப்னு ஸாபித் குர்ஆனின் ஏதேனும் ஓர் அரபி மொழி (எழுத்திலக்கணம்) விஷயத்தில் கருத்து வேறுபட்டால், குறைஷியரின் மொழி வழக்கத்திலேயே அதைப் பதிவு செய்யுங்கள்! ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழி வழக்கில்தான் அருளப்பெற்றது' என்று கூறினார்கள். அம்மூவரும் அவ்வாறே செய்தனர். 6
ஸஹீஹ் புகாரி : 4984.
அத்தியாயம் : 66. குர்ஆனின் சிறப்புகள்
👉 ஒருநாள் التابوت அல்லது التابوه என்கிற விஷயத்தில் அவர்கள் வேறுபாடு கொண்டனர். குறைஷியர் التابوت என்று சொல்ல ஜைத் பின் தாபீத் التابوه என்று கூறினார். இந்த வேறுபாடு உத்மான் ரலி அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. குர்ஆன் குறைஷிகளின் நடையிலேயே அருளப்பட்டு இருந்ததால் التابوت என்று குர்ஆனில் எழுத சொன்னார்.
(கன்சுல் உம்மல், ஹதீஸ் 4775, cf. இப்னு சாட், திர்மிதி)
✍️ இது எழுதாக்கம் அதாவது எழுதும் முறை பற்றியது தானே தவின, சொற்களை பற்றிய கருத்து வேறுபாடு அல்ல என்பதை இது காட்டுகிறது.
✍️ உத்மான் (ரலி) அவர்கள் அவரது காலத்திற்கு முன்பு நடைமுறையில் இருந்த குர்ஆனை மாற்றினார் என்ற தவறான எண்ணம் கிறிஸ்தவர்களால் எழுப்பப்படுகிறது. ஆனால் பல காரணங்களுக்காக கிறிஸ்தவர்களின் இந்த வாதம் மிக தவறானது.
1️⃣ முஹம்மது நபியின் எழுத்தாளர்களில் ஒருவரான ஜைத் பின் தாபீத் (ரலி) அவர்கள், ‘உத்மானின் காலத்தில் சுயாதீனமான முஷப்பை உருவாக்கிய பின்னர் அவர் அதை அபூபக்கரின் காலத்தில் தயாரிக்கப்பட்டவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவை இரண்டும் ஒத்ததாக இருந்தன என்று சாட்சியம் அளித்துள்ளார்.
👉 “நான் முஷப்பை அந்த கையெழுத்துப் பிரதிகளுடன் ஒப்பிட்டேன்; அவற்றில் எந்த ஒரு வேறுபாடுமில்லை.”
(முஷ்கில் அல்-அதர், ஹதீஸ் 2645)
✍️ இதன் மூலம் உஸ்மான் ரலி அவர்கள் குர்ஆனில் மாற்றம் செய்தார் என்ற கிறிஸ்தவ வாதம் முற்றிலுமாக உடைகிறது.
2️⃣ அலி கூறினார், “அல்லாஹ்வின் மீதானையாக உத்மானைப் பற்றி நல்லதைத் தவிர வேறு எதையும் பேசாதீர்கள். முஸஃப்பை பற்றி அவர் என்ன செய்தாரோ அதை அவர் நம் முன்னிலையிலேயே செய்தார். அவர் எங்களிடம் 'இந்த ஓதுதல் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஒருவரை நிராகரிப்பின் பக்கம் அழைத்துச் செல்லும் படி சிலர் மற்றவர்களிடம்,' என் ஓதுதல் உன்னுடையதை விட சிறந்தது 'என்று கூறுகிறார்கள். நாங்கள் அவரிடம், 'உங்கள் கருத்து என்ன? என்று கேட்டோம். அதற்கு எந்த ஒரு வித்தியாசமும் சச்சரவும் இல்லாத ஒரு முஷப்பை எல்லா மக்களும் அங்கீகரிக்க வேண்டும் என்பதாக நான் காண்கிறேன் என்று சொன்னார். பின்னர் நாங்கள் இது ஒரு சிறந்த திட்டம் என்று கூறினோம்.(கிதாபுல் மசாஹிஃப், ஹதீஸ் 62. ஸஹீஹ்)
✍️ எனவே வெளிப்படையாக உத்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அனைத்து செல்லுபடியாகும் குர்ஆன் ஓதுதலை பாதுகாக்கவும், அவற்றில் செய்யப்படும் தவறுகளை மட்டும் நீக்க பார்த்துக் கொண்டிருந்தார் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
3️⃣ உதுமான் ரலி அவர்களால் தொகுக்கப்பட்ட குர்ஆன், "பின்னர் அது தோழர்களுக்கு‘ உத்மான் ’முன்னிலையில் வாசிக்கப்பட்டது. (இப்னு கதிரின் ஃபாதைல் அல்-குர்ஆன் 1/89)
✍️ இவ்வாறு உதுமான்(ரலி) அவர்களால் தொகுக்கப்பட்ட குர்ஆன் மற்ற ஸஹாபாக்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டு ஒருமனதாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது
4️⃣ குர்ஆன் கையெழுத்துப் பிரதிகள் எரிப்பு:
✍️ மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் அடிப்படையில் உதுமான் ரலி அவர்கள் தொகுத்த குர் ஆனை தவிர்த்து மற்ற ஏனைய பிரதிகளை எரித்த சம்பவத்தை அணுக வேண்டியது அவசியம் ஆகும். அவ்வாறு பார்க்கும் பொழுது கிறிஸ்தவர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவிடு பொடியாகி விடும்.
✍️ அதுமட்டுமில்லாமல் ஸஹாபாக்கள் தங்களுடன் வைத்திருந்த குர்ஆன் பிரதிகளில் குர்ஆன் வசனத்திற்கு விளக்கங்கள், குறிப்புகள் மற்றும் அல்லாஹ்வால் ரத்து செய்யப்பட்ட அல்லது மாற்றப்பட்ட வசனங்களையும் வைத்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் குர்ஆனின் மற்ற ஓதுதல் முறையையும் அவர்கள் குறிப்பெடுத்து வைத்திருந்தனர். இந்த கையெழுத்துப் பிரதிகளில் இருந்து குர்ஆனைப் படிக்கும் பிற்கால தலைமுறையினர், அவர்களின் கையெழுத்துப் பிரதிகளில் படித்தவை மட்டுமே உண்மை என்று கருதி குழப்பத்தை ஏற்படுத்த கூடும் போன்ற காரணங்களே உஸ்மான் ரலி அவர்கள் ஏனைய கையெழுத்துப் பிரதிகளை எரிப்பதற்கு காரணமாக அமைந்தது.
✍️ ஆகவே உத்மான் ரலி அவர்கள் தனிப்பட்ட கையெழுத்துப் பிரதிகளின் அடிப்படையில் பிற்காலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து பிரதிகளையும் அழிக்க முடிவு செய்தார். இந்த முயற்சியில் அவருக்கு நபி தோழர்களின் ஆதரவு இருந்தது.
👉 Mus’ab bin Sa’d அறிவிக்கிறார்: “உத்மான்(ரலி) கையெழுத்துப் பிரதிகளை எரித்தபோது ஏராளமான மக்கள் இருந்ததைக் கண்டேன். அவர்கள் அதை விரும்பினார்கள்.” (மேலும்)“அவர்களில் ஒருவர் கூட அதை எதிர்க்கவில்லை”. (கிதாபுல் மசாஹிஃப், ஹதீஸ் 33. ஸஹீஹ்)
✍️ இவை அனைத்தும் உதுமான் ரலி அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் அல்லது சர்வாதிகார பாணியில் செய்யப்படவில்லை. மாறாக இது ஒரு சஹாபாக்கள் உடன் கலந்து ஆலோசித்து அதனடிப்படையில் செய்யப்பட்ட கூட்டு விவகார பணியாகவே இது அமைந்திருந்தது. மற்றும் இவை அனைத்தும் மக்கள் மக்கள் முன்னிலையிலேயே செய்யப்பட்டது.
👉 அனைத்து மக்களும் ஒரு கையெழுத்துப் பிரதியைப் பின்பற்றுவதற்கான உத்மானின் முயற்சிகளைப் பொறுத்தவரை, ‘அலி(ரலி) அவர்கள்:“ அல்லாஹ்வின் மீதாணையாக, நான் விவகாரங்களுக்குப்(கலீஃபாக) பொறுப்பேற்றிருந்தால், நானும் இதையே செய்திருப்பேன். ” (கிதாபுல் மசாஹிஃப், ஹதீஸ் 62. ஸஹீஹ்)
✍️ அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) மட்டும் தம்முடைய பழைய பிரதியை எரிக்க முதலில் மறுத்து விட்டார். அவரும் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களுடைய இந்தப் பணியின் முக்கியத்துவத்தையும், நியாயத்தையும் அறிந்து இதற்குக் கட்டுப்பட்டு விட்டார்.
✍️ ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் மற்றும் நல்லறிஞர்களின் ஏகமனதான முடிவோடு, அனைவரின் கண்காணிப்பிலும் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் இவ்வாறு திருக்குர்ஆன் பிரதி எடுக்கப்பட்டது.
உஸ்மான் றழி அவர்கள் தொகுத்த அல் குர்ஆன் பிரதி தற்போது எங்கு உள்ளது
பதிலளிநீக்குபிரான்ஸ் பல்கலைக்கழகம்
நீக்குஅல்குர்அனை வரிசை படுத்தியவர் யார்? வரிசை படுத்தும் போது யாரால் சரி பார்க்கபட்டது?
பதிலளிநீக்கு