முஹம்மது நபி ஓர் இறைத்தூதரே...
முஹம்மது நபி ஓர் இறைத்தூதரே...
✍️அது ஒரு போர்க்கால நேரம். இறைவனிடமிருந்து பத்ர் போர் புரிவதற்கு அனுமதி வந்த பொழுதில் 'பத்ர்' எனும் இடத்தில் நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் மும்முரமாக கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர்.
✍️நபித்தோழர்களுக்கு எவ்வாறு எதிரிப்படையை எதிர்நோக்கப் போகின்றோம் என்ற எண்ணம் கவலையுறச் செய்தது. ஏனெனில் எதிரிப் படையான மக்காவிலுள்ள குறைஷிகளிடத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான படை வீரர்கள். நூற்றுக்கும் அதிகமான ஒட்டகங்கள், அதிக போர்க்கருவிகள். இஸ்லாமியப் படையிலோ சற்றேறக் குறைய முன்னூற்றி பதிமூன்று படை வீரர்கள், சில போர் வாள்கள், பத்துக்கும் குறைவான ஒட்டகங்கள் மட்டுமே.
✍️இந்நிலையில் தூரத்தில் மணல் மேடுகளின் வளைவுகளில் இரண்டு தோழர்கள் நபி(ஸல்) அவர்களும்,நபித் தோழர்களும் இருந்த அவையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். எல்லாரும் அவர்களை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். அவர்கள் நெருங்கி வர, வர அவர்கள் யார் என தெரிந்தது. ஹுதைபாவும், அவருடைய தந்தை யமானும்தான் என்பதைத் தோழர்கள் அறிந்து கொண்டார்கள்.
✍️அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தவர்களை வரவேற்று வருகையின் நோக்கத்தைக் கேட்டறிந்தார்கள். வந்திருந்த இருவரும் பத்ர் போருக்கான அறிவிப்பை அறிந்து போரில் பங்கேற்பதற்காக வந்ததாகக் கூறினார்கள். ஹுதைபா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் போரில் கலந்து கொள்வதற்காக மக்காவிலிருந்து குறைஷிகளிட மிருந்து தப்பித்து வந்திருக்கின்றோம். நாங்கள் இங்கு வர ஆயத்தமானதும் அபூஜஹ்ல் உள்ளிட்ட குறைஷி தலைவர்கள் எங்களை இடைமறித்து நிறுத்தினார்கள். பின்னர் எங்கே செல்கின்றீர்கள்? என்று எங்களிடம் வினவினர். நாங்கள் மதினாவிற்கு எங்களது தோழர்களைக் காணச் செல்கிறோம் என்றோம். அவர்களோ அப்படியாயின் சத்தியம் செய்யுங்கள். எங்களுக்கும் தெரியும் நீங்கள் எங்களுக்கு எதிராக முஹம்மதுடன் சேர்ந்து போரில் கலந்து கொள்வீர்கள். நீங்கள் ஒரு போதும் போர் நடைபெறும் இடத்திற்குச் செல்லக் கூடாது. நேராக மதீனாவிற்குத் தான் செல்ல வேண்டும்' என்றார்கள். எங்களுக்கு எதிரான இப்போரில் ஒருபோதும் கலந்துகொள்ள மாட்டோம என வாக்குத் தாருங்கள் எனக் கேட்டார்கள். நாங்களும் போர் தந்திரத்தின் அடிப்படையில் நாங்கள் போர் நடை பெறும் இடத்திற்குச் செல்ல மாட் டோம், மதீனாவிற்குச் சென்று திரும்பி விடுவோம் என ஒப்புக் கொண்டோம். அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடமிருந்து வாக்குறுதி பெற்றுக் கொண்டனர் என நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தனர்.
👉பெருமானார் அவர்கள் சற்று மெளனம் காத்தார்கள். பின்னர் மெளனம் கலைத்தார்கள். 'ஹுதைபாவே..! அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி நீங்கள் மதீனாவிற்கே திரும்பி விடுங்கள். நாம் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அல்லாஹ்விடம் உதவி கோருவோம்' என்று சொன்னார்கள்.
👉(ஆதாரம்: முஸ்லிம் 3661)
✍️நபி(ஸல்) அவர்கள் சொற்ப நபர்களைக் கொண்ட படையைக் கொண்டு பெரும் படையை எதிர்க்கும் போர் நேரத்திலும் படைக்குக் கிடைத்த இரு போர் வீரர்களை போரில் கலந்து கொள்ள வேண்டாம் என்றார்கள். “உங்களது போர் தந்திரத்தை பாராட்டுகின்றேன்' என ஹுதைபா (ரலி) அவர்களை நபிகளார் உச்சி முகரவில்லை. நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் அது இஸ்லாத்திற்கு பரம வைரியான அபூ ஜஹ்லாக இருந்தாலும் சரியே..! என முடிவெடுத்தார்கள். இறுதியில் அப்போரில் அல்லாஹ்வின் அருளால் வெற்றியும் கண்டார்கள்.
💎சிந்திக்க சில கேள்விகள்:💎
▶️1. போர் போன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் அதிலும் எதிரி படைகளுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவான போர் வீரர்களையும் மற்றும் ஆயுதங்களையும் கொண்டிருந்த போதிலும் தனது சக தோழர்கள் இஸ்லாமிய விரோதகளுடன் செய்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக போரில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சொல்லும் ஒருவர் எவ்வாறு இறைவனது விஷயத்தில் பொய் சொல்லியிருக்க முடியும்? அல்லது எவ்வாறு தன்னை இறைத்தூதர் என்று பொய்யாக வாதிட முடியும்?
▶️2. எதிரிப்படைகளுடன் ஒப்பிடும்போது மிக குறைவான எண்ணிக்கையில் முஸ்லிம் வீரர்கள் இருந்த போதிலும், முஹம்மது நபி அவர்கள் இறைவனது விஷயத்தில் பொய் சொல்லி இருந்தால் அல்லது தன்னை இறைத்தூதர் என்று பொய்யாக வாதிட்டு இருந்திருந்தால், இறைவனிடம் உதவி கூறுவோம் என்று இந்த இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு சொல்ல முடியும்?
✍️எதிரிப்படைகளை ஒப்பிடும்போது மிக குறைந்த வீரர்களையும் ஆயுதங்களையும் கொண்ட இக்கட்டான சூழ்நிலையிலும் ஒருவர் இறைவனது உதவியை நாடி, தன் சக தோழர்களை தங்களது எதிரிகளுடன் செய்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு போரில் ஈடுபட வேண்டாம் என்று செல்லும் ஒருவர் எவ்வாறு இறைவனது விஷயத்தில் பொய் சொல்லி இருப்பார்? நிச்சயமாக பொய் சொல்லி இருக்கவே மாட்டார். நிச்சயமாக முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதற்கு இந்த சம்பவம் நடுநிலையோடு சிந்திக்கும் எவருக்கும் சிறந்த படிப்பினையாக இருக்கும்.
✴️சிந்திக்கும் மக்களுக்கு இதில் தெளிவான சான்று உள்ளது.✴️
கருத்துகள்
கருத்துரையிடுக