இயேசு: நான் அவர்தான்
இயேசு: நான் அவர்தான்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால்....
எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ளும் போது தான் அதன் உண்மை தன்மைமை நாம் புரிந்து கொள்ள முடியும். ஒரு வேதம் என்றால் அதனை முழுமையாக படித்த பிறகே அது சொல்ல வரும் விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள முடியும். ஒரு உரையாடல் என்றாலும் அதனை முழுமையாக கேட்கும்போது தான் அதனை சரிவர புரிந்து கொள்ள முடியும். இதுதான் இயற்கையான விதி. இயேசுவின் உரையாடலில் உள்ள சில குறிப்பிட்ட வார்த்தைகளை(வசனங்களை) எடுத்து கொண்டு அவரை இறைவன் என்று பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்கள் இயேசுவை சாதாரண மனிதனாக காட்டும் அவரது உரையாடலில் உள்ள மறுபகுதியை மறைக்க பார்க்கின்றனர். உண்மையை மறைத்து இயேசுவை இறைவனாக்க பார்க்கின்றனர். இந்த விசயத்தில் அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கின்றனர். உண்மையை என்ன தான் மறைக்க பார்த்தாலும் அது வெளிவரவே செய்யும்.
பழைய ஏற்பாட்டில் கர்த்தரை இறைவன் என்று தெள்ளத்தெளிவாக சொல்வது போல் இயேசுவை இறைவன் என்று சொல்லும் ஒரு வசனமும் இல்லை. ஆயினும் சில வசனங்களை திரித்து இயேசுவை இறைவனாக சித்தரிக்க கிறிஸ்தவர்கள் முயலுகின்றனர். அப்படிப்பட்ட வசனங்களில் ஒன்றுதான்
யோவான் 13:13.
13. நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ஆண்டவர் என்ற சொல்லை கொண்டு இயேசு தன்னை இறைவன் என்று சொல்வதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் பைபிளை பொருத்தவரையில் ஆண்டவர் என்ற சொல் இறைவனுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சொல் அல்ல. ஆண்டவர் என்ற சொல் அரசனுக்கும்(முதலாம் ராஜாக்கள் 1:2), தீர்க்கதரிசிக்கும்(யாத்திராகமம் 7:1), கணவருக்கும்(1 பேதுரு 3:6), மக்களுக்கும்(சங்கீதம் 82:6) எஜமானனுக்கும் கூட பயன்படுத்தப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு
வீட்டு எஜமானனும் ஆண்டவரே:
வீட்டு எஜமானன் எழுந்து கதவைப் பூட்டின பின்பு நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே! ஆண்டவரே! எங்களுக்கு திறக்க வேண்டுமென்று…
லூக்கா 13:25
லூக்கா 13:25
பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.
மத்தேயு 25:11
மத்தேயு 25:11
ஆண்டவர் என்ற சொல்லை கொண்டு ஒருவரை இறைவன் என்று சொல்வதாக இருந்தால் பைபிளில் சொல்லப்பட்ட பல நபர்களை இறைவன் என்று சொல்ல வேண்டி வரும். இதிலிருந்து ஆண்டவர் என்ற சொல் பைபிளில் இறைவன் என்ற அடிப்படையில் பயன்படுத்தப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
நான் அவர்தான்:
"நான் அவர்தான்" என்ற வாசகத்தை நான்தான் மேசியா என்ற அடிப்படையில் இயேசு சொல்லியிருந்த போதிலும், கிறிஸ்தவர்கள் இந்த வாசகத்தை தவறான விளக்கம் கொடுத்து இயேசுவை இறைவனாக்க பார்க்கின்றனர். நான் தான் அவர் என்ற வார்த்தையை இயேசு நான் தான் கர்த்தர் என்ற அடிப்படையில்தான் பயன்படுத்தினார் என்பது கிறிஸ்தவர்களின் மற்றொரு வாதமாகும். இவர்களின் இந்த வாதமும் பைபிளுக்கு விரோதமானது.
25. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
26. அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
(யோவான் 4)
(யோவான் 4)
யோவான் சுவிஷேத்தின் மற்றொரு இடத்தில் சொல்லப்பட்ட மேசியா நான் தான் என்று சொல்வதற்கு " நான் அவர் தான்" என்ற பதத்தை இயேசு பயன்படுத்தியுள்ளார்.
உண்மையில் இயேசு நான் தான் கர்த்தர் அடிப்படையில் இந்த வார்த்தையை பயன்படுத்தி இருந்தால் இதற்கு அடுத்தடுத்த வசனங்களிலேயே தன்னை கர்த்தரின் ஊழியக்காரனாக ஏன் அடையாளப்படுத்தி கொள்ள வேண்டும்?
16. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
யோவான் 13
யோவான் 13
ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல என்று இயேசு தெளிவாக தன்னை கர்த்தரின் ஊழியக்காரன் என்றும் கர்த்தரால் அனுப்பப்பட்டவர் என்றும் அடையாளப்படுத்துகிறார். கர்த்தரின் ஊழியகாகாரனும் கர்த்தரும் சமமாக முடியாது என்பதை அனைவரும் அறிவர். அதனால்தான் இதுப்போன்ற வசனங்களை மறைத்து சந்தேகத்துக்கு உரிய வசனங்களை திரித்து இயேசுவை இறைவனாக காட்டுகின்றனர் கிறிஸ்தவர்கள். இருந்த போதிலும் இயேசு அல்லாஹ்வின் ஊழியக்காரன் தான் என்பதை எவர்களாலும் மறைக்க முடியாது.
சத்தியமே வெல்லும்.
கருத்துகள்
கருத்துரையிடுக