பத்து ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட மஸ்ஜித்
பத்து ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட மஸ்ஜித்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால்.....
இந்த உலகில் மிக தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மதங்களில் ஒன்று இஸ்லாம். இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரம் திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லீம்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம் என்றாலும் இந்த பிரச்சாரங்கள் முஸ்லீம் அல்லாதவர்களை இஸ்லாத்தினை பற்றி அறியும் ஆவலை தூண்டியும் விடுகிறது என்பதை மறுக்க முடியாது.
இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்கள் சில சமயங்களில் முஸ்லீம் விரோத மனப்பாங்கு உள்ளவர்களையும் முஸ்லீம்களுக்கு நண்பர்களாக்கி விடுகிறது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றைத் தான் இப்போது நாம் பார்க்க போகின்றோம்.
பிரிட்டனில் உள்ள லிங்கான்(lincoln) என்று பகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பல எதிர்ப்புகளையும் மீறி முதல் மஸ்ஜித் திறக்கப்பட்டது. மஸ்ஜித் கட்டுமானத்திற்கான தொடக்கத்தில் எதிர்த்தவர்களில் லான் டர்ரண்டும் ஒருவர்.
லான் டர்ரண்டு ஒரு முன்னாள் இராணுவ வீரர். தனது வீட்டில் பிரிட்டன் மற்றும் செயின்ட் ஜார்ஜின் சிலுவை கொடியை பறக்க விடும் அளவுக்கு தேசப்பற்றும் மத ஈடுபாடும் கொண்டவர். தான் ஒரு ஆங்கிலேயர் என்பதில் பெருமிதம் கொள்பவர். இந்த கொடிகள் சில நேரங்களில் இவரை முஸ்லீம் விரோத மனப்பாங்கு கொண்டவராக பிறருக்கு அடையாளம் காட்டும். ஏனெனில் செயின்ட் ஜார்ஜின் சிலுவை கொடி என்பது முஸ்லீம்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட சிலுவை யுத்த பின்னணியை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லிங்கான் பகுதியில் 250 க்கும் மேற்பட்டோர் ஜிம்மா நேரத்தில் தொழுகைக்காக கூடுவதால் அவர்களுக்கு சொந்த இடத்தில் மஸ்ஜித் கட்டுவதன் அவசியம் ஏற்பட்டது. அதற்கான வேலைகளை முஸ்லீம்கள் தொடங்கிய போது லான் டர்ரண்ட் தனது எதிர்ப்பை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பள்ளிவாசல் கட்டவிடாமல் தடுப்பதற்கான ஒரு குழுவையும் உருவாக்கினார்.
இந்த நேரத்தில் லிங்கான் பகுதியில் வசித்து வந்த முஸ்லீம்கள் சில ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டனர். அதாவது பள்ளிவாசலின் முக்கியத்துவத்தை குறித்தும் பள்ளிவாசல் சம்பந்தமாக அங்குள்ள மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் தீர்க்க வீடு வீடாக துண்டு பிரசரங்களுடன் மக்களை சந்திப்பது என்று முடிவெடுத்தனர். அதில் தன்வீர் அஹமது முக்கியமானவர். ஆனால் அதில் பல பிரச்சினைகள் இருந்தது. அதாவது துண்டு பிரசுரங்களை கொடுக்கும் போது எந்த மாதிரியாக பதில் வரும் என்பதே அந்த கவலை. தன்வீர் அஹமதின் குடும்பத்தார் அவ்வாறு கொடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்கள். இருந்த போதிலும் தன்வீர் அஹமது தனது பணியை மேற்கொண்டார். ஒவ்வொரு வீடாக சென்று பல நபர்களை துண்டு பிரசுரங்களுடன் சந்தித்தார். பலரும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். சிலருக்கு இவரது இந்த முயற்சி பிடிக்கவில்லை. துண்டு பிரசுரங்களை குப்பை தொட்டியில் தன்வீருக்கு நேராகவே வீசும் அளவுக்கு தங்களது எதிர்ப்பை காட்டினர். தன்வீர் அஹமது சந்தித்த நபர்களில் லான் டர்ரண்டும் ஒருவர். இந்த சந்திப்பு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்கு இடையே நட்பை ஏற்படுத்தியது.
முஸ்லீம் விரோத மனப்பாங்கு கொண்ட ஆங்கில பாதுகாப்பு கட்சியும்(English Defence League) அந்த பகுதியில் பள்ளிவாசல் கட்டுவதை எதிர்த்து பேரணி மேற்கொண்டனர்
தன்வீர் அஹமதின் சந்திப்புக்கு பின் மனம் மாறிய லான் டர்ரண்டு பள்ளிவாசல் கட்டுவதற்காக ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டார். பள்ளிவாசல் கட்டுமானத்தை எதிர்த்த மக்களுக்கு எதிராக "அவர்களை புறக்கணியுங்கள்" என்று கடித பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சென்றார்.
இதன் பிறகு ஆங்கிலேய மக்களால் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் லான் டர்ரண்ட் பார்க்கப்பட்டார். தங்களில் ஒருவராக முஸ்லீம்கள் லாண் டர்ரண்ட்டை முஸ்லீம்கள் பார்த்தனர். இறுதியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிவாசல் திறக்கப்பட்டது. இப்போது லாண் டர்ரண்டும் தன்வீர் அஹமதுவும் நல்ல நண்பர்கள். கிழக்கும் மேற்கும் லிங்கானில் சந்தித்து கொண்டன என்று முதல் பள்ளிவாசல் திறப்பை பற்றி லாண் டர்ரண்ட் ஆனந்தத்துடன் கூறுகிறார்.
குறிப்பு: மாற்று மதத்தவர்களுக்கு முஸ்லீம்கள் செய்ய வேண்டிய தாவா எனும் மார்க்க கடமையையும், பிற மக்களின் சந்தேகங்களை தீர்க்க வைக்க வேண்டிய சமூக அக்கறையையும் முஸ்லீம்களுக்கு புரிய வைப்பதே இந்த பதிவின் நோக்கம்.
ஆதாரம்: BBC News
கருத்துகள்
கருத்துரையிடுக